×

1 சாமுவேல் : 14

  • 1 : ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியான வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப்பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்துக்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
  • 2 : சவுல் கிபியாவின் கடைசிமுனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதாளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறு பேராயிருந்தார்கள்.
  • 3 : சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.
  • 4 : யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்துக்குப் போகப் பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர். மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.
  • 5 : அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
  • 6 : யோனத்தான் தன் ஆயததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
  • 7 : அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.
  • 8 : அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்துக்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.
  • 9 : நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.
  • 10 : எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.
  • 11 : அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்தின்முன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,
  • 12 : தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக் கொடுத்தார் என்று சொல்லி,
  • 13 : யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான்.
  • 14 : யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
  • 15 : அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாய், தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.
  • 16 : பென்யமீன் நாட்டலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.
  • 17 : அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம் பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
  • 18 : அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.
  • 19 : இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
  • 20 : சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்துக்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
  • 21 : இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.
  • 22 : எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக் கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
  • 23 : இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார். அந்த யுத்தம் பெத்தாவேன் மட்டும் நடந்தது.
  • 24 : இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்தவருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலம்மட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.
  • 25 : தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள். அங்கே வெளியிலே ஒரு தேன்சுடு கட்டியிருந்தது.
  • 26 : ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டு தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
  • 27 : யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக் கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.
  • 28 : அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்குப் போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் எங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.
  • 29 : அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.
  • 30 : இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருவின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
  • 31 : அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.
  • 32 : அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.
  • 33 : அப்பொழுது இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டு வாருங்கள்.
  • 34 : நீங்கள் ஜனத்துக்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டு வந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.
  • 35 : பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.
  • 36 : அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்து போய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.
  • 37 : அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.
  • 38 : அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.
  • 39 : அது எனது குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.
  • 40 : அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப் பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப் பக்கத்திலே இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.
  • 41 : அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான் மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது; ஜனங்களோ தப்பினார்கள்.
  • 42 : எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
  • 43 : அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன். அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.
  • 44 : அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.
  • 45 : ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய ரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.
  • 46 : சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்துக்குப் போய்விட்டார்கள்.
  • 47 : இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.
  • 48 : அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.
  • 49 : சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில் மூத்தவள் பேர் மோப், இளையவள் பேர் மீகாள்.
  • 50 : சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம். அவள் அகிமாசின் குமாரத்தி; அவனுடைய சேனாதிபதியின் பேர் அப்னேர். அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.
  • 51 : கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.
  • 52 : சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக் கொள்ளுவான்.